நாமக்கல் சட்டசபை தொகுதியை 25 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கைப்பற்றியது


நாமக்கல் சட்டசபை தொகுதியை 25 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 3 May 2021 5:50 PM GMT (Updated: 3 May 2021 5:52 PM GMT)

நாமக்கல் சட்டசபை தொகுதியை 25 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கைப்பற்றி இருப்பதால், அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் சட்டசபை தொகுதியை 25 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கைப்பற்றி இருப்பதால், அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
நாமக்கல் தொகுதி
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் தலைநகரான நாமக்கல் தொகுதி குறித்த எதிர்பார்ப்பு எப்போதும் கட்சியினர் இடையே அதிகமாக இருக்கும். இருப்பினும் இந்த தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக அ.தி.மு.க.-தி.மு.க. இடையே நேரடி மோதல் ஏற்படவில்லை. இதனால் தி.மு.க. நிர்வாகிகள் இந்த முறை எப்படியும் தி.மு.க. போட்டியிட வேண்டும் என தலைமையிடம் வலியுறுத்தி வந்தனர்.
நாமக்கல் சட்டசபை தொகுதியை பொறுத்த வரையில் கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு அ.தி.மு.க.- தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் தி.மு.க. வெற்றி பெற்றது. 2001-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ்-புதிய தமிழகம் இடையேயும், 2006-ம் ஆண்டு காங்கிரஸ்-அ.தி.மு.க. இடையேயும் போட்டி நிலவியது. இந்த இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிவாகை சூடியது.
தொடர்ந்து 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.-கொங்குநாடு முன்னேற்ற கழகம் இடையேயும், 2016-ம் ஆண்டு அ.தி.மு.க.-காங்கிரஸ் இடையேயும் போட்டி ஏற்பட்டது. இந்த இரு தேர்தல்களிலும் அ.தி.மு.க. தொடர்ச்சியாக வெற்றிபெற்றது.
தி.மு.க. வெற்றி
இதற்கிடையே நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேட்பாளராக நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராமலிங்கம் அறிவிக்கப்பட்டார். அதே நேரம் அ.தி.மு.க. சார்பில் 3-வது முறையாக கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. களம் இறக்கப்பட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு நாமக்கல் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டதால் இருகட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நாமக்கல் சட்டசபை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் திருச்செங்கோட்டில் நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் 1,06,494 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். நாமக்கல் தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதனால் தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்து உள்ளனர். இதை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு நாமக்கல் மணிக்கூண்டு அருகே பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர்.

Next Story