மாவட்டத்தில் பதிவான நோட்டா வாக்குகள்


மாவட்டத்தில் பதிவான நோட்டா வாக்குகள்
x
தினத்தந்தி 3 May 2021 7:17 PM GMT (Updated: 3 May 2021 7:17 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.  
நோட்டா வாக்குகள் 
விருதுநகர் மாவட்டத்தில் பதிவான நோட்டா, செல்லாத வாக்குகள் பற்றிய விவரம் வருமாறு:- 
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 
அதிகபட்சமாக ராஜபாளையம் தொகுதியில் தான் 1,868 நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளது.
 இதற்கு அடுத்தபடியாக சிவகாசி தொகுதியில் 1757 வாக்குகளும், ஸ்ரீவில்லிபுத்தூரில 1666 வாக்குகளும், விருதுநகர் தொகுதியில் 1570 வாக்குகளும், அருப்புக்கோட்டை தொகுதியில் 1323 நோட்டா வாக்குகளும், சாத்தூரில் 1097 வாக்குகளும், குறைந்தபட்சமாக திருச்சுழியில் 740 நோட்டா வாக்குகளும் பதிவாகி உள்ளது.  
செல்லாத வாக்குகள்
 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்கு பதிவு செய்யும் பொழுது செல்லாத வாக்குகள் பதிவானதாக வாய்ப்பில்லாத நிலையில் தபால் வாக்குகளில் மட்டுமே செல்லாத வாக்குகள் பதிவாகும் நிலை இருந்து வந்த நிலையில் கடந்த தேர்தல்களில் பணியாற்றும் அரசு அலுவலர் மட்டுமே தபால் வாக்கு பதிவு செய்து வந்த நடைமுறை இருந்து வந்தது.
 இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் தபால் வாக்குப்பதிவு செய்ய வாய்ப்பளித்தது. இதனால் செல்லாத வாக்குகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. மாவட்டத்தை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 792 செல்லாத வாக்குகள் பதிவாகியுள்ளது.
 இதற்கு அடுத்தபடியாக ராஜபாளையம் தொகுதியில் 288 செல்லாத வாக்குகளும், சாத்தூர் தொகுதியில் 218 செல்லாத வாக்குகளும், அருப்புக்கோட்டையில் 208 வாக்குகளும், திருச்சுழியில் 142 வாக்குகளும், சிவகாசி தொகுதியில் 80 வாக்குகளும், குறைந்தபட்சமாக விருதுநகரில் 60 செல்லாத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
மூன்றாவது இடம் 
இந்தநிலையில் 3-வது இடம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது பெருவாரியான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியே மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
 அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதி தவிர மற்ற 6 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தை பெற்றுள்ளது. சிவகாசி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனகபிரியா 20865 வாக்குகளும், ஸ்ரீவில்லிபுத்தூரில் அபிநயா 20148 வாக்குகளும், விருதுநகரில் செந்தில்குமார் 14311 வாக்குகளும், அருப்புக்கோட்டையில் உமா 12392 வாக்குகளும், திருச்சுழியில் ஆனந்த ஜோதி 13654 வாக்குகளும், சாத்தூர் தொகுதியில் பாண்டி 12626 வாக்குகளும்,  ராஜபாளையம் தொகுதியில் ஜெயராஜ் 15453 வாக்குகளும் பெற்றிருந்தனர். 
வெற்றி வாய்ப்பு பாதிப்பு 
அ.ம.மு.க.வை பொறுத்தமட்டில் சாத்தூர் தொகுதியில் மட்டுமே எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் 32 ஆயிரத்து 916 வாக்குகளை பெற்றார்.
 இந்த தொகுதியை பொறுத்தமட்டில் ராஜவர்மன் பெற்ற வாக்குகள் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதித்துள்ளது என்றே கருதவேண்டியுள்ளது. மற்ற தொகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பெறவில்லை. அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் அருப்புக்கோட்டை தவிர பிற தொகுதிகளில் மாவட்டத்தில் அதிக வாக்குகள் பெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 
இப்போது மாவட்டத்தில் தே.மு.தி.க. போட்டியிட்ட ஒரே தொகுதியான அருப்புக்கோட்டையில் இக்கட்சி வேட்பாளர் ரமேஷ் 2535 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இதற்கு பிரசார பலத்தை தவிர்த்து இதர காரணங்களே பிரதானமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story