நித்திரவிளையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


நித்திரவிளையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 3 May 2021 7:53 PM GMT (Updated: 3 May 2021 7:53 PM GMT)

நித்திரவிளையில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

கொல்லங்கோடு:
நித்திரவிளையில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

வெளிநாட்டில் வேலை

நித்திரவிளை அருகே பூத்துறையை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் (வயது51). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்தார். பின்னர், கொரோனா காரணமாக வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் இங்கேயே தங்கியுள்ளார். 
  தற்போது காஞ்சாம்புறம் பகுதியில் புதிதாக வீடு கட்டி மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

குண்டு வீச்சு

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் வெளியே ஏதோ வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. உடனே கிருஷ்ணகுமாரும், அவரது மனைவியும் வெளியே வந்து பார்த்தனர். வீட்டின் முன்பக்கத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் முன்பு உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகள் கிடந்தன.
யாரோ பெட்ரோல் குண்டு வீசி சென்றது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. 

போலீசார் விசாரணை

இதுகுறித்து நித்திரவிளை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதும் இல்லாததால் குண்டு வீசிய மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தபட்ட நபர்களை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story