கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
விடுபட்ட இடத்தில் இருந்து சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்
விடுபட்ட இடத்தில் இருந்து சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கோரிக்கை
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளுக்காக தினமும் கூடலூர் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் குறிஞ்சி நகரில் இருந்து லாரஸ்டன் நெம்பர்.4 பகுதிக்கு சாலை செல்கிறது.
பல ஆண்டுகளாக சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
சாலை அமைக்கும் பணி
இதைத்தொடர்ந்து லாரஸ்டன் பகுதியில் இருந்து 1½ கி.மீ. தூரம் வரை சாலை அமைக்கும் பணி கடந்த 1 மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பாதி தூரம் வரை மட்டுமே சாலை அமைக்கப்பட்டது.
பின்னர் தேர்தல் உள்பட பல்வேறு காரணங்களால் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது குறிஞ்சி நகரில் இருந்து சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் போராட்டம்
இதை அறிந்த பொதுமக்கள் விடுபட்ட இடத்திலிருந்து சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த ஓவேலி பேரூராட்சி எழுத்தர் அசோக் தலைமையிலான பணியாளர்கள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விடுபட்ட இடத்திலிருந்து சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் கூறும்போது, ரூ.38 லட்சத்தில் குறிஞ்சி நகரிலிருந்து லாரஸ்டன் வரை சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது 800 மீட்டர் வரை சாலை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று விடுபட்ட இடத்தில் இருந்து சாலை அமைக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story