நாமக்கல் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


நாமக்கல் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 May 2021 3:27 PM GMT (Updated: 4 May 2021 3:31 PM GMT)

நாமக்கல் அருகே மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள சாலப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னா கவுண்டர். இவரது மனைவி நல்லம்மாள் (வயது 80). இவர் தனது வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தில் புளிகளை சேகரிப்பது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு புளிகளை சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் திடீரென நல்லம்மாள் 2 காதுகளில் அணிந்திருந்த 1 பவுன் தங்கத்தோடை பறித்துள்ளார். இதில் அவரது 2 காதுகளும் கிழிந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டு உள்ளார்.

அப்போது ஆத்திரம் அடைந்த அந்த நபர் அங்கிருந்த கல்லை எடுத்து, மூதாட்டியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை அறிந்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து படுகாயம் அடைந்த மூதாட்டி நல்லம்மாளை, பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை தாக்கிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story