2 பெண்களிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு


2 பெண்களிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 4 May 2021 6:22 PM GMT (Updated: 4 May 2021 6:22 PM GMT)

வலங்கைமானில் வங்கி ஊழியர் மனைவி உள்பட 2 பெண்களிடம் மொத்தம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இப்பகுதியில் கடந்த 30 நாட்களில் நடந்த 7-வது சம்பவத்தால் மக்கள் மிகவும் பீதி அடைந்து உள்ளனர்.

வலங்கைமான்;
வலங்கைமானில் வங்கி ஊழியர் மனைவி உள்பட 2 பெண்களிடம் மொத்தம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இப்பகுதியில் கடந்த 30 நாட்களில் நடந்த 7-வது சம்பவத்தால் மக்கள் மிகவும் பீதி அடைந்து உள்ளனர்.  
சங்கிலி பறிப்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது32). இவர் வலங்கைமானில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இதனால் அவர் பணி காரணமாக தான் பணியாற்றும் வங்கி அருகே அய்யனார்கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவி திவ்யாவுடன்(27) வசித்து வருகிறார். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் திவ்யா தனது வீட்டு வாசல் முன்பு பூ வியாபாரியிடம் பூ வாங்கி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென திவ்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்தனர்.  
போலீஸ் விசாரணை 
இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா கூச்சலி்ட்டார். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்தில் திரண்டனர். ஆனால் அதற்குள் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் 3 பேரும் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் 3 பேரும் மாலை 6 மணி முதல் அப்பகுதியில் நோட்டமிட்டு திரிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வலங்கைமான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதாக என்று ஆய்வு செய்தனர். 
மற்றாரு சம்பவம்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வலங்கைமான் அருகே உள்ள பூண்டி சந்திரசேகரபுரம் பகுதியில் அங்கன்வாடி பணியாளர் ஒருவரி்டம் 2 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. இது பற்றிய விவரம் வருமாறு:- 
வலங்கைமான் அருகே உள்ள பூண்டி சந்திரசேகரபுரம் பகுதியை சேர்ந்தவர் கவுரி(45). அங்கன்வாடி பணியாளரான இவர் நேற்று இரவு லாயம் பகுதியில் ஸ்கூட்டரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கவுரியின் ஸ்கூட்டரை வழிமறித்து அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து கவுரி வலங்கைமான் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 
மக்கள் அச்சம்
வலங்கைமான் அய்யனார்கோவில் தெரு, கண்ணாடிக்கார தெரு, மரவெட்டி தெரு, செட்டித்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சுமார் 30 நாட்களில் 7 சங்கிலி பறிப்புகள் நடந்துள்ளன. எனவே அப்பகுதி பெண் மாலை நேரத்தில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து சங்கிலி பறிப்பு ஆசாமிகளின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story