சேலம் மாவட்டத்தில் புதிதாக 624 பேருக்கு தொற்று உறுதி: கொரோனாவுக்கு 15 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் புதிதாக 624 பேருக்கு தொற்று உறுதி: கொரோனாவுக்கு 15 பேர் பலி
x
தினத்தந்தி 4 May 2021 10:42 PM GMT (Updated: 4 May 2021 10:42 PM GMT)

கொரோனாவுக்கு 15 பேர் பலி

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 15 பேர் பலியானதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 564 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 624 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு 600-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு இடம் கிடைக்காமல் பல நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனால் கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 607 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 624 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
3,801 பேருக்கு சிகிச்சை
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 378 பேர், ஆத்தூரில் 38 பேர், வாழப்பாடியில் 21 பேர், ஓமலூர், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 20 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 19 பேர், சங்ககிரியில் 17 பேர், பனமரத்துப்பட்டியில் 15 பேர், காடையம்பட்டியில் 13 பேர், சேலம் ஒன்றியம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் தலா 12 பேர், தலைவாசல், எடப்பாடி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 9 பேர், கெங்கவல்லி, மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், மேட்டூரில் 5 பேர், நரசிங்கபுரத்தில் 4 பேர், பெத்தநாயக்கன்பாளையம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், நங்கவள்ளியில் 2 பேர், கொங்கணாபுரத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 455 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3 ஆயிரத்து 801 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
15 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 49, 52, 78, 57, 70, 65, 60, 47, 65 ஆகிய வயதுடைய ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் 78 வயதுடைய முதியவர் ஒருவரும் பலியானார்.
இதுதவிர 36, 55, 46, 55, 67 வயதுடைய பெண்கள் ஆகியோர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ண்ணிக்கை 564 ஆக அதிகரித்துள்ளது.
நோய் தடுப்பு பணிகள்
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story