சாவிலும் இணை பிரியாத தம்பதி ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த கணவன்-மனைவி


சாவிலும் இணை பிரியாத தம்பதி ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த கணவன்-மனைவி
x
தினத்தந்தி 6 May 2021 5:17 AM GMT (Updated: 6 May 2021 5:17 AM GMT)

மாரடைப்பால் கணவர் உயிரிழந்த தகவல் தெரியாமலேயே சிறிது நேரத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சென்னை எர்ணாவூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவொற்றியூர்,

சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 63). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவருடைய மனைவி ராஜலட்சுமி (53). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ராஜலட்சுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர்களது பிள்ளைகள் இருவரும் ராஜலட்சுமியை பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தபோது தியாகராஜன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்கள் தந்தை தியாகராஜன், பேச்சு, மூச்சு இன்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர், தியாகராஜன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

தந்தை இறந்த தகவலை தாய்க்கு தெரிவித்தால் உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வரும் அவர் தாங்க மாட்டார் என்பதால், ராஜலட்சுமிக்கு கணவர் இறந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராஜலட்சுமியும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தனது கணவர் மாரடைப்பால் இறந்த தகவல் தெரியாமலேயே சிறிது நேரத்தில் அவரும் இறந்து விட்டது தெரிந்தது.

ஒரே நாளில் கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சாவிலும் இணை பிரியாத தம்பதி என நெகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story