கோவில்பட்டி பகுதியில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி


கோவில்பட்டி பகுதியில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி
x
தினத்தந்தி 7 May 2021 1:18 PM GMT (Updated: 7 May 2021 1:18 PM GMT)

கோவில்பட்டி பகுதியில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள பலியாகினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 முதியவர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 1332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்ைச பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று
கோவில்பட்டி நகராட்சி மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இப்பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து சிறப்பு காய்ச்சல் முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
1332 பேருக்கு தொற்று
மேலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவும், 2 தனியார் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 
இந்நிலையில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 209 பேரும், தனியார் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 175 பேரும், மற்றொரு தனியார் கல்லூரி சிகிச்சை மையத்தில் 90 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 250 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 608 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
2 முதியவர்கள் சாவு
இந்நிலையில் கொரோனா தொற்று பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவரும், சரமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Next Story