ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 779 பேருக்கு கொரோனா; பெண் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 779 பேருக்கு கொரோனா; பெண் பலி
x
தினத்தந்தி 8 May 2021 8:27 PM GMT (Updated: 8 May 2021 8:27 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 779 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 779 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.
779 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
மாநகர் பகுதியில் வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கிருமிநாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் போடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனினும் வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.
மாவட்டத்தில் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிய உச்சமாக மேலும் 779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 16 ஆக உயர்ந்தது.
பெண் பலி
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 55 வயது பெண் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக கடந்த 2-ந்தேதி சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 6-ந்தேதி இறந்தார்.
3,839 பேர் சிகிச்சை
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 551 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 22 ஆயிரத்து 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். 
மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 3 ஆயிரத்து 839 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story