தேனியில் கொரோனா நோயாளிகளுக்காக சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடக்கம்


தேனியில் கொரோனா நோயாளிகளுக்காக சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடக்கம்
x
தினத்தந்தி 10 May 2021 4:10 PM GMT (Updated: 10 May 2021 4:10 PM GMT)

தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் கொரோனா நோயாளிகளுக்காக சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

தேனி:
தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் கொரோனா நோயாளிகளுக்காக சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.
சித்த மருத்துவ சிகிச்சை மையம்
தமிழகத்தில் தேனி உள்பட 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்காக சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.
இங்கு கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கியது. இதற்காக சித்த மருத்துவர்கள் சங்கரன், சுவாமிநாதன், சிராஜூதீன் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
உணவு-பயிற்சிகள்
இங்கு அளிக்கப்படவுள்ள சிகிச்சை முறைகள் குறித்து அங்கு பணியாற்றும் மருத்துவ குழுவினரிடம் கேட்டபோது, “காய்ச்சல், உடல் வலி, இருமல், வயிற்றுப்போக்கு, மணமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவ முறையில் மருந்து, மாத்திரைகள், கசாயம் போன்றவை வழங்கப்படும். தினமும் காலையில் சித்த யோகப் பயிற்சி, சூரியக்குளியல், மாலையில் எளிய நடைப்பயிற்சி, இரவில் உடல்நலம் மற்றும் மனநல கல்வி போதிக்கும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்” என்றனர்.
கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் செயல்பட்ட கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் துரிதமாக குணமடைந்தனர். 

Next Story