குழந்தை திருமணம் நடத்தினால் சிறை தண்டனை- கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை


குழந்தை திருமணம் நடத்தினால் சிறை தண்டனை- கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 May 2021 7:36 PM GMT (Updated: 16 May 2021 7:36 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்தினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை, மே:
நெல்லை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்தினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தை திருமணம்

21 வயதுக்கு உட்பட்ட ஆணுக்கும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுக்கும் இடையே நடக்கும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். குழந்தை திருமணத்தால் இளம் வயதில் கருத்தரித்தல், கருச்சிதைவு, தாய்சேய் மரணம், ரத்த சோகை போன்ற பிரச்சினைகளும், குழந்தைகள் எடை குறைவாகவும், உடல் மனக்குறைபாடு உள்ள குழந்தைகளாகவும் பிறக்கும் அபாயம் உள்ளது.
மேலும் படிக்கும் வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதால் கல்வி தடைபட்டு தன்னம்பிக்கை குறைந்து, எதிர்காலத்தை இழக்க நேரிடும்.

சிறை தண்டனை

ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது பரவலாக காணப்படுகிறது. அவ்வாறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்போருக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அலல்து இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
எனவே பெற்றோரோ அல்லது பாதுகாவலர்களோ குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது. குழந்தை திருமணம் குறித்து பொது மக்கள் சைல்டு லைன் 1098, மாவட்ட சமூக நல அலுவலகம் 0462-2576265, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு 0462 -2901953, 2551953 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story