வேதாரண்யத்தில், டன் கணக்கில் வீணாகும் முல்லைப் பூக்கள்


வேதாரண்யத்தில், டன் கணக்கில் வீணாகும் முல்லைப் பூக்கள்
x
தினத்தந்தி 20 May 2021 4:17 PM GMT (Updated: 20 May 2021 4:17 PM GMT)

வேதாரண்யத்தில் முழு ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் டன் கணக்கில் முல்லைப்பூக்கள் வீணாகிறது. விளைச்சல் அமோகமாக இருந்தும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் முழு ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் டன் கணக்கில் முல்லைப்பூக்கள் வீணாகிறது. விளைச்சல் அமோகமாக இருந்தும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முல்லைப்பூ சாகுபடி
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம், மருதூர், நெய்விளக்கு உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 2ஆயிரம் ஏக்கரில் முல்லை பூ சாகுபடி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த முல்லைப்பூ சீசன் காலமாகும்.இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூ பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகும்.
தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் கோவில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பூக்கடைகள் நடத்த தடைமற்றும் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் வேதாரண்யம் பகுதியில் நாள் ஒன்றுக்கு 1 டன் மட்டுமே முல்லைப்பூ வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
டன் கணக்கில் பூக்கள் தேக்கம்
மேலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூக்கள் வாங்க வியாபாரிகள் வராததால் டன் கணக்கில் பூக்கள் தேக்கம் ஏற்பட்டு வீணாகிறது.. காலை 6 மணி முதல் 10 மணிக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி என்பதால் அதிகாலையில் விவசாயிகள் எழுந்து 7 மணிக்குள் பூக்கள் பறிப்பதால் குறைந்த அளவே வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பூக்களை பறிக்காமலே செடிகளில் விட்டு விடுவதால் அழுகி விணாகி விடுகிறது.
சீசன் காலத்தில் முல்லைப் பூ கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை கொள்முதல் செய்யப்பட்டது. சீசன் இல்லாத நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கிலோ ரூ.1,000 வரை விற்பனை ஆகிறது. ஆனால் தற்போது திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ளதால் பூக்கள் விலை வீச்சி அடைந்துள்ளது.ஒரு கிலோ முல்லைப்பூரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது.
விலை வீழ்ச்சி
திருவிழா காலங்களில் ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகும். முல்லை பூ விளைச்சல் அமோகமாக இருந்தும்கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் முல்லைப்பூ சாகுபடியை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ள 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே முல்லைப்பூ விவசாயிகளுக்கு வங்கி கடன் உதவியும், நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story