எலச்சிபாளையத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு
எலச்சிபாளையத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியானார்.
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் அருகே உள்ள செக்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 42). இவர் எலச்சிபாளையத்தை அடுத்த நல்லாபாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கோழிப்பண்ணையில் டிராக்டரில் இருந்து தீவனங்களை இறக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென டிராக்டர் பின் நோக்கி நகர்ந்துள்ளது. அப்போது டிராக்டருக்கு அவர் கல்லால் முட்டு கொடுக்க முயன்றார். ஆனால் அவர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் குப்புசாமியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story