கிருஷ்ணகிரி அருகே மனைவி தூக்குப்போட்டு சாவு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை


கிருஷ்ணகிரி அருகே மனைவி தூக்குப்போட்டு சாவு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 2 Jun 2021 6:17 PM GMT (Updated: 2 Jun 2021 6:17 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே மனைவி தூக்குப்போட்டு இறந்ததால், மனவேதனையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பர்கூர்:
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரத்தை அடுத்த பி.முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்  புருேஷாத்தமன் (வயது 58). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். 
இவருக்கும் திருப்பத்தூரை சேர்ந்த அழகு கலை நிபுணரான சுஜாதா (48) என்பவருக்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு தீபக் (29) என்ற மகனும், தீப்தி (26) என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுஜாதாவுக்கும், மகன் தீபக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுஜாதா கோபித்து கொண்டு திருப்பத்தூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது.
தூக்கில் மனைவி பிணம்
இதையடுத்து புருஷோத்தமன், அவரை சமாதானம் செய்து கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தார். நேற்று முன்தினம் புருஷோத்தமன், சுஜாதாவை பர்கூர் பழைய காவலர் குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் தங்க வைத்து விட்டு பணிக்கு சென்று விட்டார். மதியம் அவர், மனைவி சுஜாதாவை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வீட்டுக்கு வந்தார். 
அப்போது சுஜாதா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த புருஷோத்தமன், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சுஜாதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இறந்த மனவேதனையில் புருஷோத்தமன் கண்ணீர் மல்க சோகத்துடன் காணப்பட்டார். 
மாடியில் இருந்து குதித்தார்
இந்தநிலையில் தனது சொந்த ஊரான பி.முத்தம்பட்டிக்கு புருஷோத்தமன் சென்றார். அங்கு நள்ளிரவு 2 மணிக்கு தனது வீட்டின் எதிரே உறவினர் ஒருவர் புதிதாக கட்டிவரும் வீட்டின் மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். 
இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோகம்
போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தற்கொலை குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், திருமணமாகி 30 ஆண்டுகளாக கணவன்-மனைவி இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகத்தான் செல்வார்கள். சுஜாதாவின் இறப்பை ஏற்க முடியாத மனவேதனையில் தான் புருஷோத்தமன் தற்கொலை செய்து கொண்டுள்ளார், என்றனர்.
மனைவி இறந்த மனவேதனையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story