கொரட்டூரில் நூதன சம்பவம் கைக்குழந்தையுடன் கணவன்-மனைவி போல் சொகுசு காரில் வந்து ஆடுகள் திருட்டு


கொரட்டூரில் நூதன சம்பவம் கைக்குழந்தையுடன் கணவன்-மனைவி போல் சொகுசு காரில் வந்து ஆடுகள் திருட்டு
x
தினத்தந்தி 4 Jun 2021 11:55 PM GMT (Updated: 4 Jun 2021 11:55 PM GMT)

கைக்குழந்தையுடன் கணவன்-மனைவி போல் சொகுசு காரில் வந்து நூதன முறையில் ஆடுகளை திருடிச்சென்ற ஆண்-பெண் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை கொரட்டூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இந்திரா(வயது 56). இவர், தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். இவரது வீட்டு வாசலில் கட்டி வைத்து இருந்த 2 ஆடுகள் இடைவிடாமல் அலறின.

ஆடுகளின் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த இந்திரா, வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு நின்றிருந்த ஒரு சொகுசு காரில் கைக்குழந்தையுடன் வந்த ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய 2 பேரும் இந்திராவின் 2 ஆடுகளை திருடி காரில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

சொகுசு காரில்.....

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திரா, சத்தம் போட்டபடி ஓடிவந்தார். ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும், ஆடுகளை திருடி சொகுசு காரில் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்றனர்.

ஆடுகளை திருடி விற்கும் கும்பல் யாருக்கும் தங்கள் மேல் சந்தேகம் வராமல் இருக்க இதுபோல் சொகுசு காரில், கைக்குழந்தையுடன் கணவன்-மனைவி வலம் வந்து ஆடுகளை திருடிச்சென்றது தெரிந்தது.

கணவன்-மனைவியா?

இதுகுறித்து இந்திரா கொடுத்த புகாரின் பேரில் கொரட்டூர் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து சொகுசு காரில் வந்து ஆடு திருடிய ஆண், பெண் இருவரையும் தேடி வருகின்றனர்.

அவர்கள் பிடிபட்டால்தான் இருவரும் உண்மையிலேயே கணவன்-மனைவியா? அல்லது ஆடுகளை திருடுவதற்காக இதுபோல் கணவன்-மனைவிபோல் குழந்தையுடன் வந்து நடித்து திருடிச்சென்றனரா? என்பது தெரியவரும்.

Next Story