டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை


டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை
x
தினத்தந்தி 10 Jun 2021 5:55 PM GMT (Updated: 10 Jun 2021 5:55 PM GMT)

சுங்கான்கடை அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திங்கள்சந்தை:
சுங்கான்கடை அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
டாஸ்மாக் கடை
சுங்கான்கடை அருகே களியங்காடு பகுதியில் டாஸ்மாக்  கடை ஒன்று உள்ளது. இங்கு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சூப்பர் வைசராக பணி புரிந்து வருகிறார். தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக கடை மூடப்பட்டுள்ளது. கடைக்குள் சுமார் ரூ.6½ லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சூப்பர் வைசர் தமிழ் செல்வனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மேலும், தகவல் அறிந்த இரணியல் போலீசாரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மது பாட்டிகள் கொள்ளை
விசாரணையில் மதுக்கடை மூடப்பட்டிருந்த நிலையில் யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து விலை உயர்ந்த மது பாட்டில்களை அள்ளி சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன மது பாட்டில்களின் மொத்த விவரங்கள் உடனடியாக தெரிய வில்லை. இதுகுறித்து போலீசாரும், டாஸ்மாக் அதிகாரிகளும் கணக்கெடுத்து வருகிறார்கள். 
இதுகுறித்து டாஸ்மாக் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாஸ்மாக் அதிகாரி பால்துரை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருப்புகளை பார்வையிட்டார்.  
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இந்த கொள்ளை குறித்து இரணியல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்காக கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story