கொரோனாவுக்கு 4 பேர் பலி


கொரோனாவுக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 12 Jun 2021 6:35 PM GMT (Updated: 12 Jun 2021 6:35 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகினர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 353 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 20 ஆயிரத்து 958 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 172 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது பெண், 65 வயது பெண் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது ஆண், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 
மேலும் நேற்று 1,360 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானதில் 231 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 353-ல் இருந்து 24 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது.

372 பேருக்கு பாதிப்பு

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 39,666 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 372 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,038 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 577 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே நேற்று சென்னையில் இருந்து வெளியிடப்பட்ட பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் 5 பேரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், தவறுதலாக விழுப்புரம் மாவட்ட இறந்தவர்களின் பட்டியலோடு சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது பெயர் விபரம் விழுப்புரம் மாவட்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு விடும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story