தர்மபுரி மாவட்டத்தில், 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறப்பு தொப்பூர் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்


தர்மபுரி மாவட்டத்தில், 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறப்பு தொப்பூர் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 15 Jun 2021 1:18 AM GMT (Updated: 15 Jun 2021 1:18 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில், 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறப்பு தொப்பூர் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்

நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டத்தில் 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. தொப்பூர் பகுதி டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்.
டாஸ்மாக் கடைகள்
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் நேற்று முதல் பல்வேறு கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதன்படி மாவட்டத்தில் உள்ள 68 டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. தர்மபுரி, அரூர், பென்னாகரம் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய 7 தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். 
இவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தரையில் இடைவெளியுடன் கூடிய வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மது பாட்டில்கள் வழங்கப்பட்டது. கூட்டம் அதிகமாக காணப்பட்ட பகுதிகளில் போலீசார் உரிய பாதுகாப்பு பணியை மேற்கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். 
தொப்பூர் மதுக்கடைகள்
தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்கள் சந்திக்கும் எல்லை பகுதியில் தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் பகுதி அமைந்துள்ளது. தொப்பூர் அருகே உம்மியம்பட்டி, சனிசந்தை மற்றும் மானியதஅள்ளி ஆகிய 3 கிராமங்களில்  நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் அங்கிருந்து ஏராளமான மதுப்பிரியர்கள் தொப்பூர் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு படையெடுத்தனர். இதனால் அங்குள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. மது வாங்கும் ஆசையில் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்து கொண்டு நின்றதை காணமுடிந்தது. இதையொட்டி போலீசார் முண்டியத்தவர்களை கண்டித்து வரிசையில் சென்று மதுவாங்க அறிவுறுத்தினர். 
இதற்கிடையே 3 மதுக்கடைகளிலும் மதுப்பிரியர்கள் திரண்டதால் அந்த கிராமங்களில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் ெதரிவித்தனர்.
=====

Next Story