கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 5:33 PM GMT (Updated: 22 Jun 2021 5:33 PM GMT)

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கனமழை
தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரள மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 
இந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5,400 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5000 கனஅடி என மொத்தம் 10 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று அதிகாலை கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மாைல 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Next Story