சாராயம் காய்ச்சுவதை தடுக்க மலைவாழ்மக்கள் ஒத்துழைக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் வேண்டுகோள்


சாராயம் காய்ச்சுவதை தடுக்க மலைவாழ்மக்கள் ஒத்துழைக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 July 2021 4:47 PM GMT (Updated: 2 July 2021 4:47 PM GMT)

கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க மலைவாழ் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் வேண்டுகோள் விடுத்தார்

கச்சிராயப்பாளையம்

அடர்ந்த வனப்பகுதி

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கல்வராயன்மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் இங்கு மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சி அருகில் உள்ள கிராமங்களுக்கும், மாவட்டங்களுக்கும் கடத்தி சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.
இதை தடுக்க தனிப்படை அமைத்துபோலீசார் மலையில் முகாமிட்டு தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கடந்த ஒரு மாதத்தில் சுமார் 50 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், 1,000 லிட்டர் சாராயம், 500 கிலோ வெல்லம் ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட சாராய வியாபாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்த நிலையில் கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதால் மற்றும் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மலைவாழ் மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கரியாலூரில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கலந்துகொண்டு பேசும்போது, சாராயம் குடிப்பதால் கண் பார்வையை இழக்க நேரிடும். இதயம் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும். சாராயம் குடிப்பதால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. எனவே சாராயம் காய்ச்சுவதையும், குடிப்பதையும் தடுக்க மலைவாழ் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்த தகவலை போலீசாருக்கு ரகசியமாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 
இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீபிரியா, பிரபாவதி, கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், ராஜா,  தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் மலைவாழ்மக்கள் கலந்துகொண்டனர்.

கோரிக்கை

வனத்துறையினரும், காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டால்தான் கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க முடியும். மலைஅடிவாரத்தில் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைப்பதன் மூலம் சாராயம் கடத்தலையும், சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்கள் வெளியில் இருந்து மலைப்பகுதிக்கு எடுத்து வருவதையும் தடுக்க முடியும். இதன் மூலம் சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் தடுக்கலாம் என மலைவாழ்மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு உரிய ஆய்வுசெய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story