கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடை உரிமம் ரத்து-வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை


கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால்  கடை உரிமம் ரத்து-வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 July 2021 6:23 PM GMT (Updated: 2 July 2021 6:23 PM GMT)

உர விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சிவகங்கை,

உர விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

உரங்கள் இருப்பு

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உரங்களும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது யூரியா-2,475 மெட்ரிக் டன், டி.ஏ.பி.-343 மெட்ரிக் டன், பொட்டாஷ்-791 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ்-1,198 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது.

விலை பட்டியல்

விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் வாங்கி பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இதில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் அனைத்தும் வேளாண் துறையால் வழங்கப்படும் மண்வளஅட்டை பரிந்துரைப்படி உரம் வழங்கவும், விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் உரங்கள் அனைத்திற்கும் விலைப்பட்டியல் மற்றும் இருப்பு அளவு தெளிவாக அனைவருக்கும் தெரியும்படி குறிப்பிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அது மட்டுமின்றி விலைப்பட்டியல் பலகையின் கீழ் ஏதேனும் புகார்கள் இருந்தால் தெரிவிக்க வசதியாக அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் உர ஆய்வாளர்களின் செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும்.

கடை உரிமம் ரத்து

 உரங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விலைக்கு உட்பட்டு மட்டுமே விற்க வேண்டும் என்று அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ ஆய்வின்போது ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டாலோ உரிமம் ரத்துசெய்யப்படும்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story