ஆட்டுக்குடல் கறி வாங்கி தராததால் தொழிலாளியை கொன்றோம்; கைதான நண்பர்கள் வாக்குமூலம்


ஆட்டுக்குடல் கறி வாங்கி தராததால் தொழிலாளியை கொன்றோம்; கைதான நண்பர்கள் வாக்குமூலம்
x
தினத்தந்தி 3 July 2021 5:30 PM GMT (Updated: 3 July 2021 5:30 PM GMT)

ஆட்டுக்குடல் கறி வாங்கி தராததால் தொழிலாளியை கொலை செய்தோம் என்று அவரது நண்பர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தஞ்சைநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் என்ற அருமைக்கொடி (வயது 55). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பக்கத்து ஊரான புதுக்குளம் விலக்கு பகுதியில் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அருமைக்கொடி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், அவரை நண்பர்களே கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தஞ்சைநகரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (54), மற்றொரு செல்வராஜ் மகன் தாவீது (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான தாவீது போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
எனக்கு செல்வராஜ் மாமா உறவுமுறை ஆவார். நாங்கள் அருமைக்கொடியுடன் ஒன்றாக கூலி வேலைக்கு சென்று வந்தோம். சம்பவத்தன்று நாங்கள் 3 பேரும் ஒன்றாக கூலி வேலைக்கு சென்று விட்டு மதியம் திரும்பி வந்தோம். அப்போது அருமைக்கொடி எங்களை மது குடிக்க அழைத்தார். மேலும் எங்களுக்கு ஆட்டுக்குடல் கறி வாங்கி தருவதாகவும் கூறினார்.

இதனால் நாங்கள் 3 பேரும் ஒன்றாக மது அருந்தினோம். பின்னர் மதுபோதையில் அருமைக்கொடி எங்களுக்கு ஆட்டுக்குடல் கறி வாங்கி தர மறுத்து அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்தார். மேலும் என்னுடைய மாமா செல்வராஜையும் கீழே தள்ளி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருமைக்கொடியை தாக்கினேன். பின்னர் நானும், மாமாவும் சேர்ந்து அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து அருமைக்கொடியின் தலையில் தூக்கிப்போட்டோம். இதில் அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தாவீது, செல்வராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார், சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story