மனநலம் பாதிக்கப்பட்ட 84 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. தகவல்


மனநலம் பாதிக்கப்பட்ட 84 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. தகவல்
x
தினத்தந்தி 3 July 2021 8:56 PM GMT (Updated: 3 July 2021 8:56 PM GMT)

மனநலம் பாதிக்கப்பட்ட 84 பேர் போலீசாரால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

திருச்சி, 
மனநலம் பாதிக்கப்பட்ட 84 பேர் போலீசாரால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகள் மற்றும் பொது வெளியில் சுற்றித் திரியும் நபர்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 1, 2-ந்தேதிகளில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தலைமையில் சமூக நலத்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின்போது மனநலம் பாதிக்கப்பட்டு பொது வெளியில் சுற்றித்திரிந்த 64 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் உள்பட 84 பேர்  மீட்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, உணவு மற்றும் நல்ல ஆடைகள் அளிக்கப்பட்டன. பின்னர் மீட்கப்பட்ட அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு உறைவிடங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.

தேவையான நடவடிக்கை

இந்த சிறப்பு நடவடிக்கையில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 18 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 17 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 9 பேரும், தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா 8 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். 

இதேபோல் மண்டலத்துக்குட்பட்ட மற்ற மாவட்டங்களில் 24 பேர் மீட்கப்பட்டனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவர்கள் குடும்பத்தினரை அடையாளம் கண்டு மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. 

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் நடத்தப்பட்டு வரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட 4 பேரை, மத்திய மண்டல ஐ.ஜி. நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story