முககவசம் அணியாமல் விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை
முககவசம் அணியாமல் விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சி தென் கீழ் அலங்கம் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மீன் சில்லறை விற்பனை நிலையங்களையும், பர்மா பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் மீன் சில்லறை விற்பனை நிலையங்களில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றி சமூக இடைவெளியுடன் அனைவரும் முக கவசம் அணிந்து விற்பனை நடைபெறுகிறதா என பார்வையிட்டார். மேலும் பொதுமக்கள் மற்றும் மீன் விற்பனையாளர்களிடம் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முககவசம் அணியாதவர்களுக்கு மீன் விற்பனை செய்ய வேண்டாமென வியாபாரிகளிடம், கலெக்டர் அறிவுறுத்தினார். முககவசம் அணியாமல் பணி செய்து வந்த மீன் விற்பனை கடையின் பணியாளருக்கு அபராதம் விதித்திடவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பர்மா பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில் ஆய்வு செய்த கலெக்டர், கடை உரிமையாளர்களிடம் முறையாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட அறிவுறுத்தினார். முககவசம் அணியாமல் பணி செய்து வந்த செல்போன் விற்பனை கடையின் பணியாளருக்கு அபராதம் விதித்திடவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கோட்டாட்சியர் வேலுமணி, உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story