குளித்தலையில் திறக்கப்பட்ட ரெயில்வேகேட் மூடப்படும் அபாயம்


குளித்தலையில் திறக்கப்பட்ட ரெயில்வேகேட் மூடப்படும் அபாயம்
x
தினத்தந்தி 10 July 2021 7:39 PM GMT (Updated: 10 July 2021 7:39 PM GMT)

குளித்தலையில் திறக்கப்பட்ட ரெயில்வேகேட் சாலை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை
வேலி போட்டு அடைப்பு
கரூர் மாவட்டம், குளித்தலை தெற்கு மடவாளர் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சீனிவாசன். குளித்தலை உழவர் சந்தை-மணப்பாறை ரெயில்வேகேட் வரை செல்லும் சாலையின் நடுவில் இவருக்கு சொந்தமாக 236 அடி நீளமும் 36 அடி அகலமும் கொண்ட இடம் இருந்தது. எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் விவசாயம் செய்யும் தன் நிலத்தில் குளித்தலை நகராட்சி நிர்வாகம் சாலை அமைத்து விட்டதாக பல வருடங்களுக்கு முன்பு இவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். 
இந்தவழக்கு தொடர்பான இறுதி விசாரணையின் போது சீனிவாசனுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் அவரது நிலம் அவருக்கு ஒப்படைக்கப்படவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் அவர் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவருக்கு சொந்தமான இடம் அவருக்கு 2006-ல் சுவாதீனம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனக்கு சொந்தமான இடத்தை வேலி போட்டு அடைத்து விட்டார். இதனால் இச்சாலையில் யாரும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 
சாலை திறப்பு
பல்வேறு தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ள வழித்தடமாக இருந்த இந்த சாலை அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் அவதி அடைந்து வந்தனர். அடைக்கப்பட்ட பகுதிக்கு உரிய மதிப்பீடு செய்து அதற்கான தொகையை அந்த இடத்தின் உரிமையாளருக்கு வழங்கி பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு சாலையை திறக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 
சுமார் 4 ஆண்டுகள் இந்த சாலை அடைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு பெற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் அடைக்கப்பட்ட பகுதி அகற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இச்சாலை மீண்டும் கொண்டுவரப்பட்டது. 
பரபரப்பு
சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அடைக்கப்பட்ட சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதால், இச்சாலை திறக்க போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் அடக்கப்பட்ட இடத்தின் உரிமையாளருக்கு உரிய தொகை வழங்கப்படாத காரணத்தால் தற்காலிகமாக திறந்து கொள்ள பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பான விவரம் அடங்கிய விளம்பர பேனரை சீனிவாசனின் குடும்பத்தார் தங்களுக்கு சொந்தமான இடத்தின் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைத்துள்ளனர். இது அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
எதிர்பார்ப்பு
இடத்தின் உரிமையாளருக்கு உரிய தொகை எப்பொழுது வழங்கப்படும் அவ்வாறு வழங்கவில்லை எனில் இந்தப் பாதை மீண்டும் அடைக்கப்படும் என்கின்ற அச்சத்துடன் பல்வேறு கேள்விகளை பொதுமக்கள் முன் வைக்கின்றனர். 
பெரும் முயற்சி எடுத்து திறக்கப்பட்ட இந்தப் பாதையை மீண்டும் அடைக்காமல் இருக்கும் வகையில் இடத்தின் உரிமையாளருக்கு உரிய மதிப்பீட்டு தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Tags :
Next Story