தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் பா.ஜனதாவுக்கு இல்லை; சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி


தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் பா.ஜனதாவுக்கு இல்லை; சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 12 July 2021 8:55 PM GMT (Updated: 12 July 2021 8:55 PM GMT)

தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் பா.ஜனதாவுக்கு இல்லை என்று தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.

பெங்களூரு: தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் பா.ஜனதாவுக்கு இல்லை என்று தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.

ப.ஜனதா தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நமக்கு அடையாளம்

இந்தியா என்று சொல்லும்போது அதில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு அடையாளம். ஒரு மாநிலம் என்று சொல்லும்போது அதில் உள்ள மண்டலங்கள், மாவட்டங்கள் நமக்கு அடையாளமாக திகழ்கின்றன. அவ்வாறு தான் தமிழ்நாட்டில் கொங்கு நாடு அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு அடையாளமாக திகழ்கிறது. பொதுவாக மாநிலங்கள் அந்த பகுதி மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டை 2 ஆக பிரித்து கொங்கு நாடு மாநிலத்தை உருவாக்கும் திட்டம் பா.ஜனதாவுக்கு இல்லை. அது குறித்து எங்கள் கட்சி ஆலோசிக்கவில்லை. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கோவில்கள் உள்ளன. நமது இந்த கலாசாரம் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான அடையாளம். மேகதாது திட்டத்தை பொறுத்தவரையில் அதை அரசியல் மற்றும் உணர்வு பூர்வமான பார்வையில் பார்க்கக்கூடாது.

சகோதரத்துவ தொடர்பு

இந்த பிரச்சினையில் இரு மாநிலங்களின் நலன்களும் காக்கப்பட வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் விருப்பம். பா.ஜனதா ஒரு தேசிய கட்சியாக தேசிய கண்ணோட்டத்துடன் நாங்கள் இதை அணுகுகிறோம். மொழி, நீர் உள்ளிட்ட பிரச்சினைகளில் அரசியல் நோக்கத்துடன் செயல்படக்கூடாது. கர்நாடகமும், தமிழகமும் இந்தியா, பாகிஸ்தான் அல்ல.

இந்த மேகதாது பிரச்சினையில் இந்த இரு மாநிலங்களும் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது?. இரு மாநிலங்களுக்கும் சகோதரத்துவ தொடர்பு பழங்காலந்தொட்டும் உள்ளது. இதை நாம் மறக்கக்கூடாது. தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என்று அ.தி.மு.க. முன்னாள் மந்திரி சி.வி.சண்முகம் கூறி இருக்கும் கருத்து சரியல்ல.

மத்திய இணை மந்திரி

அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் கடுமையாக உழைத்தோம். ஆனால் வெற்றியை பெற முடியவில்லை. ஜெயலலிதா இருந்தபோதும் அ.தி.மு.க. பல முறை தோல்வியை சந்தித்துள்ளது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும் தமிழக பா.ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

இது அனைவரும் கலந்து ஆலோசனை நடத்தி எடுக்கப்பட்ட முடிவு. திறமை வாய்ந்த ஒரு இளைஞருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கம். இதற்கு முன்பு கட்சியை வழிநடத்தியவர்களும் கட்சியை பலப்படுத்த தங்களின் பங்கை ஆற்றியுள்ளனர். கட்சியில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படவில்லை. பலருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. அது போல தான் எல்.முருகனுக்கு மத்திய இணை மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கல்குவாரி

மண்டியா மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரி விஷயத்தில் சுமலதா எம்.பி. கூறியுள்ள புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். அதை விடுத்து அரசியல் ரீதியாக பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்வது என்பது சரியான நடவடிக்கை அல்ல. கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா இருக்கிறார். அவரை பதவியில் தொடர்ந்து நீட்டிக்கும் விஷயத்தில் கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரசில் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே இப்போதே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக சட்டசபைக்கு அடுத்த முறை நடைபெறும் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும். அதனால் காங்கிரஸ் தலைவர்கள் முதல்-மந்திரி பதவிக்கு கனவு காண தேவை இல்லை.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

Next Story