ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் வாரச்சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை தொடங்கியது


ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் வாரச்சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை தொடங்கியது
x
தினத்தந்தி 13 July 2021 5:16 PM GMT (Updated: 13 July 2021 5:16 PM GMT)

ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் வாரச்சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை தொடங்கியது


ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் சந்தை நடைபெறும். இங்கு ஆடு, மாடுகள், விவசாய விளைபொருட்கள், உபகரணங்கள் விற்பனை நடைபெறும். ஆடுகளை வாங்குவதற்காக கள்ளக்குறிச்சி மட்டுமின்றி, விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களில்  வருவார்கள். இதனால் சந்தை பரபரப்புடன் காணப்படும். 

ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஏப்ரல் மாதம் வாரச்சந்தை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளதால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சந்தை நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்றும் சந்தை கூடியது. விவசாயிகள் தங்களின் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடி மாதம் தொடங்குவதாலும், அடுத்த வாரம் பக்ரித் பண்டிகை வர இருப்பதாலும் ஆடுகளின் விலை அதிகரித்துள்ளது. 
இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை வாகனங்களில் வாங்கி சென்றனர். வெளிமாவட்டங்களை சேர்ந்த மொத்த கொள்முதல் வியாபாரிகள் யாரும் வராததால் வியாபாரம் மந்தமாகவே நடைபெற்றதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

Next Story