கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 July 2021 5:19 PM GMT (Updated: 16 July 2021 5:19 PM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பென்னாகரம்:
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை
தென்மேற்கு பருவமழை கர்நாடக, கேரள மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான வயநாடு, குடகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 
இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 426 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் 20 ஆயிரத்து 426 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
நீர்வரத்து அதிகரிப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்பாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. 
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் ஒகேனக்கல்லை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

Next Story