கோடரியால் தாக்கி வாலிபர் படுகொலை; தந்தை வெறிச்செயல்


கோடரியால் தாக்கி வாலிபர் படுகொலை; தந்தை வெறிச்செயல்
x
தினத்தந்தி 20 July 2021 8:16 PM GMT (Updated: 20 July 2021 8:16 PM GMT)

தார்வாரில் குடிபோதையில் தகராறு செய்ததால் வாலிபரை கோடரியால் வெட்டி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி: தார்வாரில் குடிபோதையில் தகராறு செய்ததால் வாலிபரை கோடரியால் வெட்டி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். 
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

குடிபோதையில் தகராறு

தார்வார் டவுன் சிவகங்காதர நகர் பால கங்காதர ஓனி பகுதியை சேர்ந்தவர் பக்கீரப்பா (வயது 58). இவருடைய மகன் பசவராஜ் (36). இந்த நிலையில் பசவராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், பக்கீரப்பா, பசவராஜை கண்டித்து வந்துள்ளார். இதனால் தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இந்த நிலையில் நேற்றும் பசவராஜ் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால், பக்கீரப்பா, பசவராஜை கண்டித்துள்ளார். அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

கோடரியால் தாக்கி கொலை

இதனால் ஆத்திரமடைந்த பக்கீரப்பா, வீட்டில் இருந்த கோடரியை எடுத்து மகன் என்று கூட பார்க்காமல் பசவராஜை சரமாரியாக தாக்கினார். இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்து பசவராஜ் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தார்வார் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கொலையான பசவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் ஆத்திரமடைந்த பக்கீரப்பா, கோடரியால் தாக்கி பசவராஜை கொலை செய்தது தெரியவந்தது. 

தந்தை கைது

இதுகுறித்து தார்வார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பக்கீரப்பாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story