குடிபோதையில் தாக்கியதில் சித்தி இறந்துவிட்டதாக கருதி தொழிலாளி தற்கொலை


குடிபோதையில் தாக்கியதில் சித்தி இறந்துவிட்டதாக கருதி  தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 20 July 2021 9:27 PM GMT (Updated: 20 July 2021 9:27 PM GMT)

குடிபோதையில் தாக்கியதில் சித்தி இறந்துவிட்டதாக கருதி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

இடிகரை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கறிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 51). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து தாயாரிடம் தகராறு செய்து வந்தார். 

சம்பவத்தன்று ரங்கராஜன் குடித்துவிட்டு மதுபோதையில் விட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த ரங்கராஜனின் சித்தி ராஜம்மாள் (67), அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கீழே கிடந்த கல்லால் ராஜம்மாளை தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

 அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையில், கல்லால் தாக்கியதில் சித்தி இறந்துவிட்டதாக நினைத்த ரங்கராஜன், குடிபோதையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் ரங்கராஜன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story