தலைஞாயிறை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் - கிராம மக்கள் கோரிக்கை


தலைஞாயிறை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் - கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 July 2021 5:53 AM GMT (Updated: 21 July 2021 5:53 AM GMT)

தலைஞாயிறை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு,

வேதாரண்யம் தாலுகாவில் தற்போது வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய இரு ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களிலும் 60 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு 2½ லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். பெரிய தொகுதியாக வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தலைஞாயிறு ஒன்றியத்தை தனியாகபிரித்து தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என அந்த கிராம மக்கள், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம் தாலுகாவில் தற்போது உள்ள தலைஞாயிறு போலீஸ் நிலையம், வட்டார மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், பொதுப்பணித்துறை பாசன பிரிவு அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், வட்டார கல்வி அலுவலகம், தீயணைப்பு நிலையம், மீன்வளக் கல்லூரி, மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கிராம வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் என இருபதுக்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த ஆட்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து நாகப்பட்டினம் வருவாய் கோட்டம், வேதாரண்யத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் தலைஞாயிறு தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகாவாக அறிவிப்பு முன்மொழியும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ளது மேலும் தலை ஞாயிறு புதிய வருவாய் வட்டம் மற்றும் நீதிமன்ற அலுவலகம் அமைப்பதற்கு ஏதுவாக தலைஞாயிறுஅக்ரஹாரம் வருவாய் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் நீதித்துறைக்கும் இடம் தானமாக பெறப்பட்டுள்ளது. எனவே தலைஞாயிறு கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தலைஞாயிறை புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story