லக்கிநாயக்கன்பட்டியில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்


லக்கிநாயக்கன்பட்டியில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 21 July 2021 4:33 PM GMT (Updated: 21 July 2021 4:33 PM GMT)

லக்கிநாயக்கன்பட்டியில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.

மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது லக்கிநாயக்கன்பட்டி கிராமம். இங்கு பள்ளிக்கூடத் தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு, கிழக்கு தெரு, கோவில் வீதி, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய 6 தெருக்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு போதிய வடிகால் வசதி செய்து தரப்படவில்லை என அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இங்குள்ள பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறிய கழிவுநீா் பல மாதங்களாக குளம் போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லை இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், ஏற்கனவே இந்த பகுதியை சேர்ந்த சிலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story