தாயின் கழுத்தை அறுத்து கொலை; மகன் கைது


தாயின் கழுத்தை அறுத்து கொலை; மகன் கைது
x
தினத்தந்தி 21 July 2021 6:43 PM GMT (Updated: 21 July 2021 6:43 PM GMT)

குளித்தலை அருகே தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை
மூதாட்டி 
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கணக்கபிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் மருதை. இவரது மனைவி முருகாயி (வயது 71). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பெற்றோர் மற்றும் இவர்களது மகன்கள் இருவரும் அதே பகுதியில் அருகருகே தனித்தனியாக தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களில் இளைய மகனான பொன்னுசாமி (37). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். 
கழுத்தை அறுத்து கொலை
இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் நேற்று அவரது வீட்டின் அருகே வசித்து வந்த தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த அவரது தாயார் முருகாயியை தான் வைத்திருந்த சிறிய கத்தியால் திடீரென கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த முருகாயி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். 
மகன் கைது
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தனது தாயின் கழுத்தை அறுத்துவிட்டு தனது வீட்டிற்குள் நுழைந்த பொன்னுசாமியை பிடித்துள்ளனர். இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முருகாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொன்னுசாமியை கைது செய்து அவர் எதற்காக தனது தாயாரை கொலை செய்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story