சுற்றுலா வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார்


சுற்றுலா வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார்
x
தினத்தந்தி 22 July 2021 6:15 PM GMT (Updated: 22 July 2021 6:15 PM GMT)

சுற்றுலா வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார்

ராமேசுவரம்
தனுஷ்கோடி பகுதிக்கு வருகை தந்த சுற்றுலா வாகனங்களை நேற்று போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடுத்து நிறுத்தம்
ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி  பகுதிக்கு கடந்த 18-ந் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் சென்றுவர அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியை சுற்றி பார்ப்பதற்காக வழக்கம்போல் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், கார், வேன், ஆட்டோ, அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தனுஷ்கோடி செல்வதற்காக நேற்று காலை 6 மணி முதலே வருகை தந்தனர். 
அப்போது தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள புதுரோடு பகுதியிலேயே அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் போலீசார் சாலையின் குறுக்கே தடுப்பு கம்பிகளை அமைத்து தனுஷ்கோடி சென்று வருவதற்கு அனுமதி கிடையாது. இந்திய கடற்படைஅதிகாரி ஒருவர் தனுஷ்கோடி பகுதியில் ஆய்வுக்கு சென்றுள்ளதால் அந்த ஆய்வு முடிந்து திரும்பி வந்த பின்னர்தான் அனைத்து வாகனங்களும் தனுஷ்கோடி பகுதிக்கு அனுமதிக்கப்படும் என கூறினர்.
பரபரப்பு
கடற்படையின் தலைமை அதிகாரி தனுஷ்கோடி பகுதியில் ஆய்வு பணியை முடித்துவிட்டு திரும்பி சென்ற பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் காலை 9 மணிக்கு பிறகு வழக்கம்போல் மீண்டும் தனுஷ்கோடி சென்று வர அனுமதிக்கப்பட்டன. கடற்படை அதிகாரி ஆய்வுக்காக அரிச்சல்முனை பகுதிக்கு தான் சென்றுள்ளதால் மீன் பிடிக்க செல்லும் எங்களை கம்பிப்பாடு மற்றும் பாலம் பகுதி வரை அனுமதிக்க வேண்டுமென தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் பலமுறை கேட்டும் போலீசார் அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடற்படை அதிகாரி சென்ற பிறகு மீனவர்கள் மற்றும் அனைத்து சுற்றுலா பயணிகளும் வழக்கம்போல் தனுஷ்கோடி சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.

Next Story