குடும்ப தகராறில் மர்ம சாவு மயானத்தில் பாதி எரிந்தநிலையில் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை போலீசுக்கு தெரியாமல் பிணத்தை எரித்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு


குடும்ப தகராறில் மர்ம  சாவு மயானத்தில் பாதி எரிந்தநிலையில் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை  போலீசுக்கு தெரியாமல் பிணத்தை எரித்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 July 2021 4:44 PM GMT (Updated: 23 July 2021 4:44 PM GMT)

உத்தமபாளையம் அருகே, குடும்ப தகராறில் மர்மமான முறையில் இறந்த இளம்பெண்ணின் உடலை பாதி எரிந்த நிலையில் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசுக்கு தெரியாமல் பிணத்தை எரித்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணகுமார். கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ரஞ்சிதாவுக்கும் (வயது 29) கடந்த 9 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 8 வயதில் ஒருமகள் உள்ளார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. 
இதுகுறித்த புகாரின்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார், கணவன்-மனைவி இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரையும் போலீசார் சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 
உடல் எரிப்பு
இந்த நிலையில் நேற்று ரஞ்சிதா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள், போலீசுக்கு தெரியாமல் அங்குள்ள மயானத்தில் தகனம் செய்தனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் ராயப்பன்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையில் போலீசார் மயானத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பாதி எரிந்து கொண்டிருந்த ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர். எனினும் ரஞ்சிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில்தான் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரியவரும். 
இந்தநிலையில் போலீசுக்கு தெரியாமல் பிணத்தை எரித்ததாக கணவர் கல்யாணகுமார் மற்றும் உறவினர்கள் உள்பட 4 பேர் மீது ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story