மின் கட்டண குளறுபடிகளை சரி செய்வோம்


மின் கட்டண குளறுபடிகளை சரி செய்வோம்
x
தினத்தந்தி 26 July 2021 12:00 PM GMT (Updated: 26 July 2021 12:00 PM GMT)

மின் கட்டண குளறுபடிகளை சரி செய்வோம் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி, 
மின் கட்டண குளறுபடிகளை சரி செய்வோம் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில்  மின்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
மின்துறை செயலாளர் தேவேஷ்சிங், துறைத்தலைவர் சண்முகம், கண்காணிப்பு பொறியாளர்கள் ராமேஷ், ஸ்ரீதரன் உள்பட மின்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிவில் நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
தடையற்ற மின்சாரம்
மின்துறை ஆய்வுக்கூட்டத்தில் நகரப்பகுதியில் உள்ள மின் விளக்குகள், தடையற்ற மின்சார வினியோகம், மின்துறையில் உள்ள நிலுவைத்தொகைகள், ஊழியர்களின் பதவி உயர்வு, காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆலோசித்தோம்.
நகரப்பகுதியில் உள்ள மின் விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றுவது குறித்து பேசப்பட்டது. மின்துறை சார்பில் எதிர்காலத்தில் சிறந்த சேவை செய்வது குறித்து பேசினோம். அதுதான் அரசின் எண்ணம்.
கட்டண குளறுபடி
வர்த்தக நிறுவனங்களுக்கு டிமாண்ட் சார்ஜ் வசூலிப்பது தொடர்பாக அரசு ஒரு சில முடிவுகளை எடுத்துள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சருடன் கலந்துபேசி அறிவிப்பு வெளியிடுவோம். மின்சார கட்டண குளறுபடிகளை சரிசெய்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வோம்.
மின்துறை தனியார் மயம் விஷயத்தில் மத்திய அரசு ஒரு சில முடிவுகளை எடுத்து செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய மின்துறை அமைச்சரை சந்தித்து பேசுவோம். மாநில மக்கள், மின்துறை ஊழியர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்போம்.
பற்றாக்குறை இல்லை
புதுவையை பொறுத்தவரை தற்போது மின்திருட்டு குறிப்பிடும் அளவுக்கு இல்லை. அதுதொடர்பாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுப்போம். மின்துறையில் பாக்கிகளும் வசூலாகாமல் உள்ளது. இதுதொடர்பாக சிலர் நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளனர். அந்த வழக்குகளை விரைந்து முடித்து பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் மின்சார பற்றாக்குறை என்பது இல்லை. மின்துறை ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பான கோப்புகள் வந்துள்ளன. இதுதொடர்பாக ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story