ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் விவசாயி குடும்பத்துடன் நிலத்தில் தஞ்சம்


ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் விவசாயி குடும்பத்துடன் நிலத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 27 July 2021 7:40 PM GMT (Updated: 27 July 2021 7:40 PM GMT)

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் விவசாயி குடும்பத்துடன் நிலத்தில் தஞ்சம் அடைந்தார்.

பாலக்கோடு:

ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பேளாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் இடும்பன். இவருக்கும், இவரது உறவினர்களான கிருஷ்ணன் மகன்களான முருகேசன், சக்திவேல் ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஊர் முக்கிய பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு இடும்பன் மற்றும் அவரது சகோதரர் ஞானவேல் மற்றும் அவரது தந்தை கோவிந்தன் ஆகிய 3 பேரையும் அழைத்து பேசினர். 
அப்போது இடும்பன் குடும்பத்தாரிடம் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலித்து உள்ளனர். மேலும் அபராதமாக ரூ.2 லட்சம் கொடுத்தால் மட்டுமே ஊரில் இருக்க வேண்டும். அதுவரை ஊரில் இருக்கக்கூடாது என மிரட்டி அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். 
குடும்பத்துடன் தஞ்சம்
இதுகுறித்து இடும்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் பாலக்கோடு போலீஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் இந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த இடும்பன் நேற்று தனது விவசாய நிலத்தில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்தார். மேலும் உரிய நீதி கிடைக்கும்வரை நிலத்திலேயே குடும்பத்தோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story