மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் படுகாயம்


மண் சரிந்து விழுந்து  2 தொழிலாளர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 29 July 2021 8:01 PM GMT (Updated: 29 July 2021 8:01 PM GMT)

குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

நாகர்கோவில், 
குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
மண் சரிந்தது
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் புத்தன்அணை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்காக குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி நேற்று காலை வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே குழாய் பதிப்பதற்காக சில தொழிலாளர்கள் மூலம் குழி தோண்டப்பட்டது. அருகில் தோண்டிய மணலை குவித்து வைத்திருந்தனர்.
அப்போது பணியில் ஈடுபட்ட தொழிலாளிகள் புலியடி தெரு கிருஷ்ணன் (வயது 55), மஞ்சாலுமூடு மோகன் ஆகியோர் மீது திடீரென மண் சரிந்து விழுந்தது.
2 பேர் காயம்
இந்த மண் 2 பேரையும் அமுக்கியது. இதில் அவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதோடு படுகாயமும் அடைந்தனர். உடனே இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story