பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 வாலிபர்கள் கைது


பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 31 July 2021 7:51 PM GMT (Updated: 31 July 2021 7:51 PM GMT)

சாலையின் நடுவே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் நேற்று இரவு வாலிபர்கள் சிலர் சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி பிறந்த நாள் கொண்டாடினார்கள். அப்போது பிறந்த நாள் கேக்கை மோட்டார் சைக்கிள் மீது வைத்து பட்டாக்கத்தியை கொண்டு வெட்டி, மது அருந்தினார்கள். இதனை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர். போக்குவரத்துக்குக்கு இடையூறும் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. 
இதனைத்தொடர்ந்து அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேப்பந்தட்டையை சேர்ந்த சேட்டு மகன் ஹரி (வயது 24) என்பவர் பிறந்த நாளை கொண்டாடியது தெரியவந்தது. மேலும் அவருடன் அவரது நண்பர்கள் தொண்டப்பாடியை சேர்ந்த சூர்யா (25), வேப்பந்தட்டையை சேர்ந்த ஜனா (24), பிரபாகரன் (23) ஆகியோர் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரி, ஜனா, சூர்யா ஆகிய 3 பேரை நள்ளிரவில் கைது செய்தனர். தப்பியோடிய பிரபாகரனை வலைவீசி தேடி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மேலும் சில வாலிபர்கள் கலந்து கொண்டனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேப்பந்தட்டையில் நடுரோட்டில் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி வாலிபர்கள் பிறந்த நாள் கொண்டாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story