கோவில் பூசாரி கொலை வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது


கோவில் பூசாரி கொலை வழக்கில்  2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2021 7:50 PM GMT (Updated: 2 Aug 2021 7:50 PM GMT)

திருமங்கலம் அருகே கோவில் பூசாரி கொலை வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமங்கலம்,ஆக
திருமங்கலம் அருகே கோவில் பூசாரி கொலை வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில் பூசாரி
திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டைச் சேர்ந்தவர் முத்துவைரன் (வயது 42). இவர் அங்குள்ள வைரவன் கோவிலில் பூசாரியாக இருந்தார். இவர் தனது முதல் மனைவி இறந்த பின்பு இரண்டாவதாக உமா மகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
உமா மகேஸ்வரியின் மூத்த மகள் அபிக்கும், மதுரை திடீர் நகரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதனால் மனம் உடைந்த வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
கொலை
இதனால் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. தற்கொலை செய்து கொண்ட வினோத் குமாரின் பெரியம்மா மகன் ராஜதுரை (25) அபியின் தங்கையை திருமணம் செய்துள்ளார்.
தனது அண்ணன் வினோத் குமாரின் தற்கொலைக்கு மாமனார் முத்துவைரவன் தான் காரணம் என அவர் மீது ஆத்திரம் கொண்ட ராஜதுரை மற்றும் அவரது தாய் சுந்தரி (47), தங்கை மீனா ஆகியோர் இணைந்து முத்துவைரவனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 30-ந்தேதி ராஜதுரை மற்றும் அவரது நண்பர் மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த நாகராஜன் (24) ஆகியோர் டாஸ்மாக் கடை அருகே காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த முத்துவைரவனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடி விட்டனர். 
4 பேர் கைது
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மதுரையில் மறைந்திருந்த ராஜதுரை, நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். 
மேலும் இக்கொலையில் தொடர்புடைய சுந்தரி, அவரது மகள் மீனா ஆகிய 4 பேரை கைது செய்தனர். வினோத்குமாரின் தற்கொலைக்கு காரணமான முத்துவைரவனை கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story