டிரைவர் கொலை வழக்கில் 5 பேர் கைது


டிரைவர் கொலை வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2021 10:22 PM GMT (Updated: 5 Aug 2021 10:22 PM GMT)

சிவகாசியில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் டிரைவர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசியில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் டிரைவர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். 
டிரைவர் கொலை
சிவகாசி தெய்வானை நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ராஜ் மகன் ஆனந்தராஜ் (வயது 31). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
 இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர்கள் சிலர் டிரைவர் ஆனந்தராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற சிலர் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆனந்தராஜை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 பேர் கைது
 சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்தனர். பின்னர் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
 இந்த நிலையில் சிவகாசி ஏ.வி.டி.பள்ளி தெருவை சேர்ந்த தேவி லால் மகன் தினேஷ்குமார் (22), நடராஜ் காலனி பெரியசாமி மகன் மகேந்திரன் (22), பாலமுருகன் மகன் ஹரிபிரியன் (22), சுப்ரீம் நகர் மாரிமுத்து மகன் மாக்கான் என்கிற செண்பகராஜ் (20), சுப்பிர மணியபுரம் வேல்முருகன் மகன் வெங்கடேஷ்குமார் (22) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன் விரோதம் 
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தினேஷ்குமார் தரப்பினருக்கும், ஆனந்தராஜூக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்த நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கிறது என தெரியவந்துள்ளது.

Next Story