மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி


மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 8 Aug 2021 7:36 PM GMT (Updated: 8 Aug 2021 7:36 PM GMT)

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கோனேரிப்பாளையம் அருகே உள்ள மைதானத்தில் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த கிரிக்கெட் போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி போட்டியில் விளையாட டோன்ட் கேர் கிரிக்கெட் கிளப் அணியும், பிரைடு ஆப் பெரம்பலூர் அணியும் தகுதி பெற்றன. 
நேற்று நடந்த இறுதி போட்டியினை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி டாஸ் போட்டு, பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார். முதலில் பேட்டிங் செய்த பிரைடு ஆப் பெரம்பலூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை எடுத்தது. அந்த அணியின் வீரர் பிரபுதேவா அதிகபட்சமாக 32 ரன்களை எடுத்தார். 115 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டோன்ட் கேர் கிரிக்கெட் கிளப் அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 115 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் நவீன் 38 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
வெற்றி பெற்ற டோன்ட் கேர் கிரிக்கெட் கிளப் அணிக்கு பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் கோப்பை வழங்கப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இறுதி போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன், போலீஸ் சூப்பிரண்டின் நிர்வாக அலுவலரின் நேர்முக உதவியாளர் நாகராஜ், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் கிரிக்கெட் அகாடமியினர் செய்திருந்தனர்.

Next Story