அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்ததால் ஆத்திரம்


அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 18 Aug 2021 7:17 AM GMT (Updated: 18 Aug 2021 7:17 AM GMT)

பொன்னேரி அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 26). அ.தி.மு.க. பிரமுகரான இவர் சோழவரம் ஒன்றிய பேரவை துணைத்தலைவராகவும், எம்.ஜி.ஆர். நகர் கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சிலம்பரசனை ஓட ஓட விரட்டி தலை, கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசில் சரண்

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சோழவரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிலம்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சோழவரம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், கொலை தொடர்பாக ஜனப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ், ரஞ்சித்குமார் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

கஞ்சா கும்பலை காட்டி கொடுத்ததால்...

கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில்:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் கஞ்சா விற்றவர்கள் குறித்து சிலம்பரசன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கஞ்சா விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கஞ்சா விற்கும் கும்பலை சேர்ந்தவர்கள் சிலம்பரசனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

கொலை சம்பவத்தில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Next Story