திருட்டு போன ரூ.9½ லட்சம் செல்போன்கள் மீட்பு


திருட்டு போன ரூ.9½ லட்சம் செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 19 Aug 2021 7:28 PM GMT (Updated: 19 Aug 2021 7:28 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் திருட்டு போன ரூ.9½ லட்சம் மதிப்புள்ள 52 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் திருட்டு போன ரூ.9½ லட்சம் மதிப்புள்ள 52 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செல்போன்கள் திருட்டு
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஏராளமான பொதுமக்களிடமிருந்து செல்போன்கள் திருட்டு போனது. இதுதொடர்பாக செல்போனை இழந்தவர்கள் அந்தப் பகுதி போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். இந்தநிலையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக செந்தில்குமார் பொறுப்பேற்றார். 
அவர் பொறுப்பேற்ற உடன் திருட்டு போன செல்போன்களை அதன் ஐ.எம்.ஐ. எண்ணை வைத்து கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இதைக் கண்டுபிடிப்பதற்காக சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சபரி தாசன் தலைமையில் ஏட்டுகள் பிரதீப் குமார், பாலசுப்பிரமணியன், சரவணகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
52 செல்போன்கள்
 இந்த தனிப்படையினர் தொடர் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை காணாமல் போன 52 செல்போன்களை கண்டுபிடித்தனர். இந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.  போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், 52 பேர்களிடமும் அவர்களின் செல்போனை ஒப்படைத்தார். 
பின்னர் அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை காணாமல் போன ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 52 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொதுவாக பொதுமக்கள் தங்கள் செல்போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் செல்போன் திருடு போனால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையம் அல்லது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீசில் புகார் தரலாம். 
புகார் அளிக்கலாம்
மேலும் பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்திய செல்போன்களை விலைக்கு வாங்கினால் அந்த செல்போனை கொடுப்பவர் அதன் உரிமையாளர் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். திருடப்பட்ட செல்போன்களை வாங்குவதும் குற்றமாகும். எனவே ஏற்கனவே பயன்படுத்திய செல்போன்கள் வாங்கும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். புதிய செல்போன்கள் வாங்கும்போது உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் திருடு போனால் அதை கண்டுபிடிக்க முடியும். மேலும் வாட்ஸ்-அப் அல்லது முகநூலில் தவறான தகவல், புகைப்படங்கள் வெளியானால் அதுகுறித்து புகார் கொடுத்தால் 24 மணி நேரத்தில் அதை நீக்கிவிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முரளிதரன், ராஜேந்திரன் மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story