ஒரு மாதத்துக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு மட்டுமே நடத்தப்படும்


ஒரு மாதத்துக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு மட்டுமே நடத்தப்படும்
x
தினத்தந்தி 30 Aug 2021 7:16 PM GMT (Updated: 30 Aug 2021 7:16 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் நாளை 520 பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் ஒரு மாதத்துக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு மட்டுமே நடத்தஅறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறினார்.

திருச்சி, ஆக.31-
திருச்சி மாவட்டத்தில் நாளை  520 பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் ஒரு மாதத்துக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு மட்டுமே நடத்தஅறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறினார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து அமலில் உள்ள ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாளை (புதன்கிழமை) முதல் தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளில் மதிய உணவு திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்படுவதால், திருச்சி மாவட்டத்தில் இதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்த பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
வழிகாட்டு நெறிமுறைகள்
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறுகையில், தமிழக அரசு உத்தரவின்பேரில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு மேஜைக்கு 2 மாணவர் வீதம் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் அமர வைக்கப்படுவார்கள். மழையோ, வெயிலின் தாக்கமோ இல்லாமல் சீதோஷ்ண நிலை இருந்தால் திறந்தவெளியில் மாணவர்களை அதிக இடைவெளியுடன் அமர வைத்து பாடம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும்.
உடல் வெப்பநிலை குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக உள்ள மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். காய்ச்சலுடன் உள்ள மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர கூடாது. மேலும்,பள்ளிக்குவரும்மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெறப்படும். பள்ளிக்கு வந்தவுடன் மாணவர்களை மனரீதியாக தயார்ப்படுத்தும் விதமாக முதல் ஒரு மாதத்துக்கு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி மட்டுமே நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி
இதேபோல் திருச்சி மாவட்டத்தில் கல்லூரிகளும் நாளை (புதன்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளதால், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும், திருச்சியில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் கல்லூரி மாணவ-மாணவிகள் பலரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.

Next Story