இலங்கையில் இருந்து படகில் வந்து தூத்துக்குடியில் பதுங்கி இருந்த கணவன் - மனைவி கைது


இலங்கையில் இருந்து படகில் வந்து தூத்துக்குடியில் பதுங்கி இருந்த கணவன் - மனைவி கைது
x
தினத்தந்தி 2 Sep 2021 3:45 PM GMT (Updated: 2 Sep 2021 3:45 PM GMT)

தூத்துக்குடியில் பதுங்கி இருந்த கணவன் - மனைவி கைது

தூத்துக்குடி:
இலங்கையில் இருந்து படகில் வந்து தூத்துக்குடியில் பதுங்கி இருந்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர். 
கடத்தல் சம்பவங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள், கடல் அட்டை, வெங்காய விதை, பீடி இலை போன்ற பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபகாலமாக ஆட்களை கடத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இலங்கையை சேர்ந்த 40 பேர் மங்களூருவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடிக்கு படகில் வந்து உள்ளனர். பின்னர் மங்களூருக்கு சென்று, அங்கிருந்து கனடா செல்ல இருந்தபோது பிடிபட்டனர்.
இதேபோன்று இலங்கையை சேர்ந்த 27 பேரை மதுரை அருகே மதுரை கியூ பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்களும் இலங்கையில் இருந்து படகில் தூத்துக்குடிக்கு வந்ததும், அங்கிருந்து மதுரைக்கு சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த கருத்தக்கண்ணு, சாக்ரடீஸ் ஆகிய 2 பேைர கைது செய்து விசாரணை நடத்தினர். 
கணவன்-மனைவி
மேலும் இலங்கையில் இருந்து வந்தவர்களில் கணவன்- மனைவி மாயமானார்கள். அவர்களை மதுரை கியூ பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் தூத்துக்குடி வைப்பார் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுரை கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் வைப்பாரில் தங்கி இருந்த கணவன்- மனைவியை கைது செய்து அழைத்து சென்றனர்.

Next Story