6 மாதங்களாக நிரம்பி வழியும் மருதாநதி அணை


6 மாதங்களாக நிரம்பி வழியும் மருதாநதி அணை
x
தினத்தந்தி 2 Sep 2021 4:17 PM GMT (Updated: 2 Sep 2021 4:17 PM GMT)

6 மாதங்களாக மருதாநதி அணை நிரம்பி வழிகிறது.

பட்டிவீரன்பட்டி:

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. இதன் மூலம் நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 3 பேரூராட்சிகள், 2 ஊராட்சிகளின் குடிநீர் ஆதாரமாக அணை திகழ்கிறது. 

74 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 72 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. தொடர்ந்து 6 மாதங்களாக அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது.  அணை கட்டிய நாளில் இருந்து இத்தனை மாதங்கள் அணையில் தொடர்ந்து முழு கொள்ளளவு தண்ணீர் இருந்ததில்லை.

 அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, விாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. அந்த தண்ணீர் அப்படியே வாய்க்காலில் வெளியேற்றப்படுகிறது. 

தண்ணீர் நிரம்பி வழிவதால், அணையை சுற்றி 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா, முந்திரி, இலவம்பஞ்சு ஆகியவை பயிரிட்டுள்ள தோட்டங்களில் தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதற்கிடையே அணையின் நிலவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Next Story