முழு விசாரணை நடத்த மேலும் 4 தனிப்படைகள் அமைப்பு


முழு விசாரணை நடத்த மேலும் 4 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 4 Sep 2021 5:50 AM GMT (Updated: 4 Sep 2021 5:50 AM GMT)

கோடநாடு வழக்கு குறித்து முழு விசாரணை நடத்த மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி

கோடநாடு வழக்கு குறித்து முழு விசாரணை நடத்த மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

முக்கிய சாட்சிகளிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான உண்மைகளை வெளியே கொண்டு வர காவல்துறை மூலம் முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஊட்டி கோர்ட்டு 4 வார கால அவகாசம் வழங்கியதை தொடர்ந்து, போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். 

நேற்று முன்தினம் கோடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சேர்க்கப்பட்ட முக்கிய சாட்சிகள் மற்றும் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர். 

மேலும் 4 தனிப்படை

இதுதொடர்பாக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது யார், யாரிடம் விசாரணை நடத்துவது, தற்போது யாரிடம் விசாரணை நடந்து வருகிறது, வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முழு விசாரணை நடத்த மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-கோடநாடு வழக்கில் முழு விசாரணை நடத்த நீலகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் ஏற்கனவே தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. 

கோர்ட்டில் அறிக்கை

ஒவ்வொரு தனிப்படையிலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட தலா 5 பேர் என மொத்தம் 25 போலீசார் இடம்பெற்று உள்ளனர். கோடநாடு வழக்கை முக்கிய நபர்களிடம் விசாரித்து விரைந்து முடிக்க இந்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

ஏற்கனவே வழக்கில் கைதான 10 பேர் மற்றும் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்த இருக்கின்றனர். மேலும் 5 தனிப்படைகளும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ள உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 
போலீசார் தொடர்ந்து ஒரு மாதம் விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர் என்று கூறப்படுகிறது.


Next Story