காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Sep 2021 8:48 PM GMT (Updated: 4 Sep 2021 8:48 PM GMT)

திட்டக்குடி அருகே காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

திட்டக்குடி, 

திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி ஊராட்சி 5-வது வார்டில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் பழுதானது. இதனால் அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யமுடியாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

விரைவில் நடவடிக்கை

இதுபற்றி தகவல் அறிந்த ஆவினங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் மின்மோட்டார் பழுதை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தனர். இதையேற்ற பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story